விருதுநகர், மார்ச் 12: தேர்தல் விதிமீறல்களை சிவிஜில் ஆப்பில் பதிவு செய்தால், 100 நிமிடத்தில் பதில் அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 933 இடங்களில் 1881 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவைகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாடு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் உள்ளன. கடந்த தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாடு இயந்திரத்தில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரை மட்டும் இணைக்க முடியும். அதில் ஒரு நோட்டா சேர்த்து 63 வேட்பாளர்கள் மட்டும் போட்டியிட முடியும். கூடுதல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும். தற்போது வந்துள்ள புதிய கட்டுப்பாட்டு இயந்திரத்தில் 24 வாக்குப்பதிவு இயந்திரங்களை வரை இணைப்பு செய்ய வசதி உள்ளது. அதனால், ஒரு நோட்டா உடன் 383 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டாலும் வாக்குச்சீட்டு பயன்படுத்த தேவையில்லை.