பரமக்குடி, மார்ச் 12: சத்திரக்குடியில் திங்கள் கிழமை நடைபெறும் வாரச்சந்தையால், மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையோரத்தில் விரிக்கப்படும் கடைகளால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. பரமக்குடி அருகே சத்திரக்குடியில் வாரந்தோறும் திங்கள் கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையை சத்திரக்குடியை சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாரச்சந்தை நடைபெறும் இடம் போதுமானதாக இல்லாததால், வியாபாரிகள் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சாலையோர கடைகள் அமைத்து வருகின்றனர். சந்தை நடக்கும் போது அதிகமாக பொதுமக்கள் கூடுவதால், தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலையோர கடைகளில் பொருள்களை வாங்குவதற்கு மக்கள் நிற்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின் வசதிக்காக காய்கறி கடை, பழக்கடை, கருவாட்டு கடை, மீன்கடை உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டாலும், சாலையை ஆக்கிரமித்து கடைகள் உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி சாலைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரிகளுக்கு சந்தை பகுதியிலேயே நிரந்தரமாக கடை அமைக்க ஏற்பாடு செய்தால் மட்டுமே வரும் காலங்களில் விபத்து அபாயத்தை தவிர்க்க முடியும்.