திருவள்ளூர், மார்ச் 8: திருவள்ளூர் மாவட்ட நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் “திடக்கழிவு மேலாண்மை” திட்டம் செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. பல கிராமங்களில் மது அருந்தும் இடமாக பயன்பாட்டில் உள்ளது. இதனால், அரசு நிதி 2 கோடி வீணாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி ஆகிய நகராட்சிகளும், 10 பேரூராட்சிகளும், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு, பூண்டி, எல்லாபுரம், திருத்தணி, பூந்தமல்லி உட்பட 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளும் உள்ளன.இதில் கடந்த 2016-17ம் ஆண்டில் 130 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்டமாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் தலா 1.50 லட்சம் மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதேபோல், நகராட்சிகளில் வார்டுகள் தோறும் உள்ள பூங்காக்களில் உரக்கிடங்குகள் அமைக்கப்பட்டது. திட்டத்தின்படி, கிராமங்களில் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களை கொண்டு குப்பைகளை சேகரித்து அதை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்தெடுத்து, மக்கும் குப்பைக்கு தனிக்குழி, மக்காத குப்பைக்கு தனிக்குழி என வெட்டி குப்பைகளை கொட்டவும் முடிவெடுக்கப்பட்டது. இந்த பணியை செய்ய, 150 குடும்பங்களுக்கு ஒரு பணியாளர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்தெடுத்து குழிகளில் கொட்ட வேண்டும். இவர்களுக்கு தூய்மை காவலர்கள் என பெயர்.