மண்டபம் அருகே கார் - டூவீலர் மோதல் டாஸ்மாக் ஊழியர் மனைவியுடன் பலி

ராமநாதபுரம், மார்ச் 7: மண்டபம் அருகே கார் - டூவீலர் மோதிய விபத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் மனைவியுடன் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். டிரைவர் கைதானார். ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகன் சந்திரசேகர் (42). மண்டபம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக இருந்தார். மனைவி பிரமீளா (எ) மாரி (32). நேற்று மாலை 3 மணியளவில் சந்திரசேகர், மனைவி பிரமீளாவுடன் டூவீலரில் மண்டபத்தில் இருந்து உச்சிப்புளிக்கு சென்று கொண்டிருந்தார். ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் அருகே சுந்தரமுடையான் பஸ்ஸ்டாப் அருகே சென்றபோது, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார், டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரமீளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஓய்வுபெற்ற ரயில்வே அலுவலரான பிரமீளாவின் தந்தை கணேசன் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இறந்தார். திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் இருவரும் இறந்தது குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயமடைந்து ராமநாதபுரம் தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் டிரைவரான மதுரை  கீரைத்துறையைச் சேர்ந்த பழனியை (44) மண்டபம் போலீசார் கைது செய்து விசாரித்து  வருகின்றனர். இதே பகுதியில்தான் கடந்த 2 தினங்களுக்கு முன்பு, 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: