பரமக்குடி, மார்ச் 6: பரமக்குடி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியதாக உள்ளது. பரமக்குடி ரயில் நிலையத்திற்கு தினமும் இரண்டு முறை சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில், வாரம் மூன்று முறை கன்னியாகுமரி மற்றும் திருப்பதியிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில், வாரம் ஒருமுறை உ.பி., ஓடிசாவுக்கு எக்ஸ்பிரஸ் ரயில், மதுரையிலிருந்து தினமும் மூன்று முறை பாசேஞ்சர் ரயில் ராமேஸ்வரத்திற்கு வந்து செல்கிறது. ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறது. இதனால் தினமும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் உள்பட வட மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். கடந்த காலங்களில் ரயில் நிலையங்களில் அதிகளவில் குற்றசம்பவங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பரமக்குடி ரயில் நிலையத்தின் ஒரு பகுதி சமூக வீரோதிகளின் கூடாரமாக உள்ளதால், குற்றச்சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளை அதிகளவில் பார்க்க முடிகிறது. பயணிகள் பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தடுக்க, ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். கேமரா இல்லாததை பயன்படுத்தி கொள்ளும் குற்றவாளிகள் பயணிகளிடம் கைவரிசை காட்டி விட்டு தப்பி விடுகின்றனர். இதனால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.