கரூர், மார்ச் 6:கரூர் மாவட்டத்தில் கடும் வெயிலால் வெற்றிலை பயிர்கள் கருகி வருகின்றன. கரூர் புகழூர், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், பாலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி ஆயிரக்கணக்கான ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகழூர் பகுதி மற்றும் கரூர் வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் விளையும் வெற்றிலைகள் வேலாயுதம்பாளையம் வெற்றிலை மண்டிக்கும், வேலூரில் உள்ள தினசரி வெற்றிலை ஏல மார்க்கெட்டிற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட வெற்றிலை மண்டிகளுக்கு திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், மோகனூர், பரமத்தி போன்ற நாமக்கல் மாவட்ட விவசாயிகளும் விற்பனைக்காக வெற்றிலைகளை கொண்டு வருகின்றனர். இங்கு நடைபெறுகின்ற வெற்றிலை ஏலத்தில் கலந்து கொள்வதற்காக கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை போன்ற ஊர்களில் இருந்து மொத்த வியாபாரிகள் வந்து வெற்றிலை ஏலம் எடுத்து லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் அனுப்பப்படுகிறது. மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உபி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் வெற்றிலை அனுப்பப்படுகிறது. தற்போது கடும் வெயில் காரணமாகவும், நீரின்றியும் வெற்றிலை பயிர்கள் கருகி வருகின்றன.