தஞ்சை, பிப். 28: தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு விழா ஆண்டுதோறும் நடைபெறும். இதன்படி இந்தாண்டு ஜல்லிக்கட்டு விழா வரும் 2ம் தேதி நடக்கிறது. இதையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை கலெக்டர் அண்ணாதுரை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்படுவது, வாடிவாசல் அமைக்கப்படுவதை பார்வையிட்டார்.
பின்னர் பார்வையாளர்கள் பார்ப்பதற்கான வசதி, கால்நடைகள் பரிசோதனை செய்யும் இடம், மாடுகளுக்கு தேவையான புல், வைக்கோல், தண்ணீர் வசதி ஏற்படுத்தி வருவதை ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து காளையை அடக்க வரும் வீரர்களின் புள்ளி விவரங்களை சேகரித்து தனித்தனியாக டிசர்ட் வழங்க வேண்டும் என்று விழா குழுவினரிடம் தெரிவித்தார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் தமிழ்செல்வன் மற்றும் பலர் உடனிருந்தனர்.