சத்தியமங்கலம் அருகே சுஜில்கரை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு

சத்தியமங்கலம், பிப்.22:சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள சுஜில்கரை கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மலைகிராம மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திங்களூர் ஊராட்சி சுஜில்கரை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மேல்நிலைத்தொட்டிக்கு நீரேற்றம் செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.இந் நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் பலமுறை முறையிட்டும் இதுவரை மின்மோட்டாரை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், கிராமத்தை ஒட்டி பசுவனாபுரம் செல்லும் சாலையில் உள்ள கைபம்பு பொருத்தப்பட்ட ஆழ்குழாய் கிணற்றிலிருந்து பெண்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.320 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்திற்கு தற்போது உள்ள இந்த ஒரு கைபம்பின் முலமாக மட்டுமே குடிநீர் எடுத்து பயன்படுத்துவதால் மிகவும் சிரமமாக உள்ளதாக மலைகிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, உடனடியாக பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: