ஈரோடு, பிப். 21: டாஸ்மாக் கடைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த ஊழியர்களிடம் அதிகாரிகள் கட்டாய வசூல் செய்வதாக சிஐடியு., புகார் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளின் கட்டிடங்களின் தன்மை குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் வெளியிட்டது. இதன்படி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கட்டாயம் கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும். கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளில் கட்டிடத்திற்கான அனுமதி பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கோர்ட் உத்தரவின் படி கடைகள் அமைப்பதற்காக குறிப்பாக கான்கிரீட் மற்றும் கழிப்பறை வசதிகள் அமைப்பதற்காக கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் மேற்பார்வையாளர்கள் கட்டாய வசூல் வேட்டை நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.