ராமநாதபுரம், பிப். 21: கே.வலசை கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் சிறுவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். தமிழக அரசு கிராம பகுதியில் மாணவர்களிடையே விளையாட்டுகளை ஊக்குவிக்க அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகள் செய்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறை காலங்களில் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று அங்கு விடுமுறையை பள்ளி மாணவர்கள் கழித்து வந்தனர். காலமாற்றம், படிப்பில் திறன்களை அதிகரித்தல் காரணமாக தற்போது பெற்றோர்கள் விடுமுறை காலங்களில் கூட மாணவர்களை எங்கும் அனுப்புவது கிடையாது. அதற்கு பதிலாக மாணவர்கள் செல்லவிருக்கும் புதிய வகுப்புகளின் பாடங்கள், கம்ப்யூட்டர், கராத்தே, சிலம்பாட்டம் என கோடை கால பயிற்சிகளை அளிக்க ஏற்பாடுகள் செய்கின்றனர். இதனால் விடுமுறை காலங்களையும் மாணவர்கள் படிப்பிற்காக செலவழிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.