சாயல்குடி, பிப். 21: முதுகுளத்தூர் அரசு கல்லூரிக்கு பஸ் நிறுத்தம கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருவதாக தினகரனில் செய்தி வெளியானது. இதனையடுத்து எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பஸ் நிறுத்த கட்டிடம் கட்ட முதற்கட்ட பணிகள் துவங்கியது. கடந்த 2012-13 ஆம் ஆண்டில் முதுகுளத்தூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது. இக்கல்லூரிகளுக்கு புதிய கட்டிடம் முதுகுளத்தூர்-தேரிருவேலி சாலையில் இரண்டாண்டிற்கு முன்பு திறக்கப்பட்டது. இளநிலை தமிழ், ஆங்கிலம், கணிதம், கணிப்பொறியியல், வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு சுமார் 10 கி.மீ.க்கு மேல் உள்ள கீழத்தூவல், பேரையூர், தேரிருவேலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.