தொண்டி, பிப். 21: காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தொண்டியில் ஐக்கிய ஜமாத் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் தாக்குதலுக்கு 40க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். இச் செயல் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் கொடூர தாக்குதலுக்கு பலியான இந்தி ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஐக்கிய ஜமாத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். பொருளாலர் சாதிக் பாட்சா, துணைத் தலைவர் அப்துல்லா, செயலாளர் அயூப்கான், ஜலீல் ஆலிம் மற்றும் ஜமாத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். செயலாளர் செய்யது அலி வரவேற்றார்.