சாயல்குடி, பிப். 21: கடலாடி அருகே ஆப்பனூரில் முளைக்கொட்டு திருவிழா துவக்கத்தையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. ஆப்பனூர் அரியநாயகி அம்மன் வருடாந்திர மாசா திருவிழா ஒரு மாதம் நடக்கும். மாசி மாத முதல் செவ்வாய்க் கிழமையில் முள்ளிசெடி ஊன்றப்பட்டு திருவிழா துவங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவில் அரியநாயகிஅம்மன் கோயில் பகுதியிலிருந்து முள்ளி செடி எடுக்கப்பட்டு, அதற்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பலவகை அபிஷேகம் செய்து, பாராம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து, ஆப்பனூர் ஊர் மையப்பகுதியில் அமைந்துள்ள முளைக்கொட்டு திண்ணையில் ஊண்டப்பட்டது. முள்ளிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் திருவிழாவை ஒரு மாதம் கொண்டாடுவர்.