தொண்டி, பிப். 20: தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் குரங்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனத்துறையினர் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு பகுதியில் 5க்கும் மேற்பட்ட குரங்குகள் தினமும் வந்து தொல்லை கொடுத்து வருகிறது. அவை வீடுகளில் புகுந்து சாப்பாட்டை பாத்திரத்துடன் எடுத்து சென்றுவிடுகிறது. வீதியில் விளையாடும் குழந்தைகளின் கையில் உள்ள தின்பண்டங்களை பறித்து செல்கிறது. இதனால் குரங்களை பார்த்து குழந்தைகள் பயத்தில் அலறுன்றனர். கடை வீதிகளில் பெட்டிகளில் உள்ள வாழை பழம் மற்றும் முட்டை உள்ளிட்ட பொருள்களை தூக்கி சென்றுவிடுகிறது. இதனை தடுக்க முயல்பவர்களை கடிக்க பாய்கிறது.