ராமநாதபுரம், பிப்.14: ராமநாதபுரம் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்குவதால், துர்நாற்றம், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் அரசு அலுவலர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் கலெக்டர் வளாக பகுதியில் அரசு குடியிருப்புகள் அமைந்துள்ளது. இதில் டி. பிளாக், சி பிளாக் போன்ற பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அரசு கடைநிலை ஊழியர்கள், அரசு வாகனங்கள் ஓட்டுனர்கள் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் பல இடங்களில் சாக்கடை கழிவுநீர் தேங்குகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் அங்கு தங்கியுள்ளவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல இடங்களில் தேங்குவதால் குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால் தினந்தோறும் கொசுத் தொல்லையால் அப்பகுதி ஊழியர்கள் அவதிபட்டு வருகின்றனர்.