திருவேங்கடம் அருகே தடையை மீறி கோயிலில் வழிபாடு நடத்த ஒரு தரப்பினர் முயன்றதால் பதற்றம்

திருவேங்கடம் பிப் 12: திருவேங்கடம் அருகே தடையை மீறி கோயிலில் ஒரு தரப்பினர் வழிபாடு செய்ய முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். திருவேங்கடம் அருகே உள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் காந்தாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு வழிபாடு நடத்துவது சம்பந்தமாக இரு பிரிவினருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்தது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரச்சனைக்குரிய கோயிலில் இரு தரப்பினரும் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் புரட்சித்தமிழகம் கட்சியின் சார்பாக அக்கட்சியின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி தலைமையில் காந்தாரியம்மன் பீடத்தில் மாற்று ஏற்பாடு செய்து தொடர் வழிபாடு செய்ய உள்ளதாக வந்த தகவலையடுத்து சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் குருவிகுளம் இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்ஐகள் அய்யனார், பரமசிவன் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பிரச்சனைக்குரிய இடத்திலும் குருஞ்சாக்குளம் செல்லும் முக்கிய சாலைகளிலும் குவிக்கப்பட்டனர்.  இந்நிலையில் ஏர்போர்ட் மூர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருவேங்கடம் வழியாக குருஞ்சாக்குளம் செல்ல முயன்ற போது திருவேங்கடம் பஜாரில் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார், சமரச பேச்சுவார்தைக்கு அழைத்தனர். தொடர்ந்து திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் திருமலைச்செல்வி, டிஎஸ்பி ராஜேந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சட்டப்பூர்வமாக மாவட்ட நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: