திருவள்ளூர், பிப். 12: வருவாய் குறைவு என்பதற்காக கிராமங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களை வேறு தடங்களில் இயக்கி வருவாய் ஈட்டுகின்றனர். இதனால், 3 முதல் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்த நகர்புறத்துக்கு சென்று அரசு பஸ்சில் பயணிக்க வேண்டி உள்ளது என கிராம மக்கள் கூறுகின்றனர்.விழுப்புரம் கோட்டம் திருவள்ளூர் டெப்போவில் இருந்து, 26 டவுன் பஸ்கள், திருத்தணி டெப்போவில் இருந்து, 36 டவுன் பஸ்கள் என மொத்தம் 62 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. மேலும், பள்ளி நாட்களில், மாணவர்களுக்காக காலை, மாலை வேளைகளில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வந்தன. இதில், பெரும்பாலான டவுன் பஸ்கள் அரசு அறிவித்தபடி இயக்கப்படுவதில்லை. உதாரணமாக, திருவள்ளூர் பணிமனையில் இருந்து, கனகம்மாசத்திரம், காஞ்சிப்பாடி, ராமஞ்சேரி, பேரம்பாக்கம், தக்கோலம், களாம்பாக்கம் வழியாக திருவாலங்காடு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் சரியாக இயக்கப்படுவதில்லை. மாறாக, அவை திருவள்ளூர் - திருத்தணி வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.அதேபோல், திருத்தணி பணிமனையில் இருந்து, புச்சிரெட்டிப் பள்ளி, கே.ஜி.கண்டிகை, நல்லாட்டூர், சிவாடா, மத்தூர், ஜனகராஜகுப்பம், ராகவுலுநாயுடுகுப்பம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களும் சரியாக இயக்கப்படுவதில்லை. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘’கடந்த 2 ஆண்டுகளாக கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் மாற்று வழியில் இயக்கப்படுவதையும், பஸ் வருவதில்லை என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.