பெரம்பலூர், பிப்.7: நமது சந்ததிகளை காப்பாற்ற இயற்கை வேளாண்மையில் சாகுபடி செய்த உணவையே உட்கொள்ள வேண்டும். குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில், முதுகலை விரிவாக்க மைய இயக்குநருர் மாலதி கூறினார்.பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கிராமங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் பற்றிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இந்தப் பயிற்சி முகாமின் 3ம் நாளான நேற்று முகாம் ஒருங்கிணைப்பாளரும் நுண்ணுயிரியல் துறைத்தலைவருமான சுரேஷ்ராஜா வரவேற்றார். கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறைத்தலைவரும், பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மைய இயக்குநருமான மாலதி முகாமிற்கு தலைமை வகித்து பேசுகையில், ரசாயண உரங்களால் மண்ணோடு, மனிதர்களும் மலட்டுத் தன்மை உடையோராக ஆகி வருகின்றனர்.செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் அதன் மூலம் விளைவிக்கக்கூடிய பொருட்களை உண்ணும் மனிதர்கள்தான் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இயற்கை விவசாயம் என்பது அத்தியாவசியமாக அமைந்து வருகிறது. நாம் நமது சந்ததிகளைக் காப்பாற்ற இயற்கை வேளாண்மையில் சாகுபடி செய்த உணவையே உட்கொள்ள வேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினராக முதுகலை விரிவாக்க மைய நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் செந்தில்குமார் கலந்துகொண்டு, மண்புழு உரம் தயாரித்தல், அஸோலா வளர்தல் மற்றும் பஞ்சகாவியா தயாரித்தல் முறைகள் பற்றி பயிற்சியளித்தார். மேலும் எளம்பலூர் செந்தமிழ் இயற்கைப் பண்ணையின் நிறுவனர் கார்த்திகேயன் கலந்துகொண்டு இயற்கை வேளாண் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைப்பேராசிரியர் விஜயகுமார் வாழ்த்திப் பேசினார்.நிகழ்ச்சியில் பல்வேறு விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களும், திரளான மாணவ, மாணவியரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் வினோத் நன்றி கூறினார்.