கொள்ளிடம், பிப்.2: கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் நடுவே ஏற்பட்டுள்ள விரிசலில் அவ்வழியாக டூவீலர்களில் வருபவர்கள் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கும் அவலநிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.நாகை மாவட்டம், கொள்ளிடம் சோதனைச்சாவடியிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஒரு கி.மீ. தூரத்திற்கு கடந்த 1950ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த பாலத்தை கடந்துதான் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சென்று வருகின்றனர். இந்தப்பாலம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்து கடலூர் மாவட்டத்தையும் நாகை மாவட்டத்தையும் இணைக்கும் பாலமாகவும் இருந்து வருகிறது.
இரவு மற்றும் பகல் ஆகிய 24 மணி நேரமும் இடைவிடாமல் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை சென்று கொண்டேயிருக்கிறது. 1950லிருந்து இன்று வரை வலிமை குன்றாமல் அப்படியே உள்ளது என்று சிறந்த பொறியாளர்களால் சான்று அளிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த பாலத்தை அதிகாரிகள் முறையாக பாரமரிக்கவில்லை என்று பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.