சென்னை, பிப்.2: குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ₹53.5 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த 2 பெண்களை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். குவைத்தில் இருந்து கல்ஃப் ஏர்வேஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த மும்தாஜ் (47), ஹயரூனிஷா (40) ஆகிய 2 பெண்கள் சுற்றுலா பயணிகள் விசாவில் குவைத்துக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பினர்.
அவர்கள், தாங்கள் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் எடுத்து வரவில்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றனர். ஆனால், சுங்க அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
உடனே 2 பெண்களையும் மறித்து, உள்ளே வரவழைத்து அவர்கள் உடமைகளை துருவி துருவி சோதனையிட்டனர். ஆனால், உடமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராத சுங்க அதிகாரிகள், பெண் சுங்க அதிகாரிகளை வரவழைத்து அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் அணிந்திருந்த உள்ளாடைக்குள் 7 தங்க கட்டிகள் மறைந்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மொத்த எடை 1.6 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ₹53.5 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் 2 பெண் பயணிகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க கட்டிகளையும் பறிமுதல் செயதனர்.
மேலும் சுங்க அதிகாரிகளின் விசாரணையில், இவர்கள் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்களை குவைத்துக்கு அனுப்பி தங்க கட்டிகளை சென்னைக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. எனவே, இவர்களை அனுப்பிய சென்னையில் இருக்கும் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.