துரைப்பாக்கம்: கல்லூரி கேன்டீன் உணவில் எலி, குடிநீர் தொட்டியில் தவளை இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கின்றனர். இவர்களுக்கு, கேன்டீனில் உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலையில் உணவு அருந்த மாணவர்கள், கல்லூரியின் கேன்டீனுக்கு சென்றனர். அங்கு, வாலியில் வைக்கப்பட்டு இருந்த தேங்காய் சட்னியில் எலி உயிருடன் உலாவிக் கொண்டு இருந்தது. இதை பார்த்ததும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து, உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைத்து மாணவர்களும் சப்பிடுவதை விட்டு பசியுடன் எழுந்து கை கழுவச் சென்றனர்.