திருமங்கலம், ஜன. 25: குழாய்கள் உடைந்து காட்சிபொருளாக மாறிவிட்டதால் மேல்நிலைத்தொட்டியில் தண்ணீர் ஏற்றமுடியாமல் குடிநீர் இன்றி ராயபாளையம் காலனி மக்கள் கடந்த 5 மாதத்திற்கு மேல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருமங்கலம் அருகேயுள்ள ராயபாளையம் கிராமத்தையொட்டி உள்ளது ஆதிதிராவிடர் காலனி. சுமார் 150க்கும் அதிகமானோர் குடியிருந்து வருகின்றனர். ராயபாளையம் கிராமத்திற்கு காவிரிகூட்டுக்குடிநீர்த்திட்டத்தில் தண்ணீர் வருகிறது. ஆனால் அருகேயுள்ள காலனிக்கு குழாய்கள் பதிக்காததால் இந்த தண்ணீர் வருவதில்லை. இங்குள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி பழுதடைந்துள்ளது.
மேல்நிலைத்தொட்டிக்கு செல்லும் குழாய்கள் அனைத்து துருபிடித்து ஓட்டைவிழுந்ததால் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் கடந்த 5 மாத்திற்கு மேலாக ராயபாளையம் காலனி மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை உண்டாகியுள்ளது. கிராமத்திற்குள் வந்து வரிசையாக நின்று தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது. பொதுமான தண்ணீர் கிடைக்காததால் காலனி பொதுமக்கள் வயல்வெளிகளில் சென்று தண்ணீர் எடுக்கும் அவலநிலை தொடர்கிறது.