சுல்தான்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்

சூலூர்.ஜன.23:  பொள்ளாச்சியை அடுத்த பொகலூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி(38). இவர் தனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தாருடன் காங்கயம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் கிடாவெட்டு நிகழ்ச்சிக்காக ஒரு வேன் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளனர். வேனை பொகலூரை சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டியுள்ளார். நேற்று காலை கிடா வெட்டு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அனைவரும் அவர்கள் சென்ற வேனிலேயே  ஊர் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். மதியம் 1 மணியளவில்  பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் சுல்தான்பேட்டையை அடுத்த தாசநாய்க்கன்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஒரு பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. சுதாரித்த வேன் ஓட்டுனர் சரவணன் குதித்து தப்பியுள்ளார்.

வேனில் பயணம் செய்த ஆறுச்சாமி,38, சக்திவேல்16, செந்தில்குமார், முருகானந்தம், முருகேசன்,காளிமுத்து, ஈஸ்வரன்,மோகன்ராஜ், நந்தினி,ஈஸ்வரி, சகுந்தலா இன்னொரு முருகானந்தம், திவாகர், சித்ரா, மனோரஞ்சிதம் ஆகிய வேனில் வந்த 17 பேரும் வேன் கவிழ்ந்ததில் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள்மீட்டு  பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு சென்ற சுல்தான்பேட்டை போலீசார்  விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: