ராமநாதபுரம், ஜன.22: கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் உதவித்தலைவர் பவுசுல் அலியுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள், முஸ்லீம் வாலிபர் முன்னேற்ற சங்கம், இஸ்லாமிய சமதர்ம சங்கத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் ஏராளமானோர் கலெக்டர் வீரராகவராவிடம் அளித்த மனுவில்,
ராமநாதபுரம் கீழக்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை அதிகளவில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக வந்த லுக்மானுல்ஹக் அப்பகுதியில் கஞ்சா விற்பதையும், ஆடுகளை திடுடி செல்பவர்களையும் பற்றி காவல்துறையில் புகார் அளிக்க போவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் 10ம் தேதி இம்ரான்கான் சதாம் உசேன் மற்றும் தாவுது ஆகிய மூவரும் லுக்மானுல்ஹக்கை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மூவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் பல்வேறு குற்றவழக்குகள் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் கொலை செய்துவிட்டு அருகில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி விட்டும் சென்றுள்ளனர். அந்த நபர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பெண்கள் நடமாட முடியாத நிலை இருப்பதால், குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுக்க கூடாது. அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.