ராமநாதபுரம், ஜன.22: ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக வங்கி ஏடிஎம் சென்டர் அமைக்க வேண்டும் என பொதுநல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. மண்டபத்திலிருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு இருமார்க்கமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து ரயில்களும் மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரத்தில் நின்று செல்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் பிளாட்பாரத்தின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் 2வது பிளாட்பாரத்திற்கு செல்லும் பயணிகள் வெகுதூரம் சுமைகளுடன் மேம்பாலத்தில் ஏறி அடுத்த பிளாட்பாரம் செல்ல வேண்டியுள்ளது. பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் ரயில் நிலையத்தின் மையப்பகுதியில் புதிய சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும். இதுதவிர சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில் பிற நகரங்களில் உள்ளது போல வங்கி ஏடிஎம் மையம் வசதி அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுகுறித்து ராமநாதபுரம் ரவிச்சந்திரன் கூறுகையில், மாவட்ட தலைநகரில் உள்ள ரயில் நிலையத்திலேயே அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. ரயில்நிலையத்தில் ஏடிஎம் வசதி இல்லாததால் வெளியூர்களில் இருந்து வரும் ரயில் பயணிகள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். அனைத்து தரப்பினரின் நலன்கருதி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி விரைவில் ஏடிஎம் வசதியை உருவாக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.