அரியலூர், ஜன.22: அரியலூர் அருகே வி.கைகாட்டி அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் அமைந்துள்ள மகாசக்தி மாரியம்மன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 30ம் ஆண்டு பால்குட திருவிழா நேற்று நடந்தது. இதையடுத்து காலையில் முட்டுவாஞ்சேரி சாலையில் அழகனேரி ஓடைப்பாலத்திலிருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், கையில் தீச்சட்டி,பால்குடம்,காவடி எடுத்தும் மற்றும் பாடை காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் கோயில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் வைத்து தரிசனம் செய்தனர்.