சாயல்குடி, ஜன. 18: பருவமழையின்றி தொடர்ச்சியாக விவசாயம் பொய்த்துபோனதால் வீடுகளில் உள்ள தானிய குழமைகள் வெறுமையானதால் சாயல்குடி பகுதியில் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்பட்டது.மானவாரி எனப்படும் பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படும் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி தாலுகா பகுதியில் வழக்கமாக பருவமழை ஜூலை மாதம் பெய்யும், ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக பருவமழை காலம் கடந்து ஆண்டின் இறுதி வாரங்களில் மிதமான மழையாக பெய்து வருகிறது.மழையை நம்பி கடந்த 8 ஆண்டுகளாக கடலாடி தாலுகாவில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரிலும், முதுகுளத்தூர் தாலுகாவில் சுமார் 16 ஆயிரம் ஏக்கரிலும் நெல் பயிரிடப்பட்டது. கமுதி தாலுகாவில் சுமார் 14 ஆயிரம் ஏக்கரிலும் நெல், மிளகாய், நிலக்கடலை, பருத்தி, மல்லி, எள், சூரியகாந்தி, சோளம் வகை சிறுதானிய பயிர்கள் போன்றவை பயிரிடப்பட்டது.இதில் முக்கிய பயிராக நெல் பயிரிடப்படுகிறது. முளைத்து பயிராகும் தருவாயில், தொடர்மழை இல்லாமை மற்றும் நீர்வரத்து இல்லாததாலும், கண்மாய், குளங்கள் வறண்டதாலும் வளர்ந்த நெல் உள்ளிட்ட சிறுதானியவகை, எண்ணெய் வித்து பயிர்கள் கருகி வருகின்றன.தொடர்ச்சியாக சுமார் 8 வருடங்களுக்கு மேலாக இந்நிலை நீடித்து வருவதால், கிராம மக்கள் வறுமையில் சிக்கி தவிக்கின்றனர். இதனால் இப்பகுதி கிராமங்களில் இந்தாண்டும் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘கடலாடி, முதுகுளத்தூர், கமுதி பகுதியில் போதிய மழையின்றி தொடர்ச்சியாக பயிர்கள் கருகி, விவசாயம் பொய்த்து வருகிறது.விவசாய நிலங்களை சீரமைத்தல், விதைகள் விதைப்பு, களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்தும், சில ஆண்டுகளாக அனைத்தும் வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கடனில் தத்தளிக்கிறோம்.