ஊட்டி, ஜன. 11: வரும் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்கான நாற்று நடவு பணிகள் நேற்று தாவரவியல் பூங்காவில் துவ்ஙகியது. இதில் 230 வகையான 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்படவுள்ளது. ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலனவர்கள் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர்.தொடர் விடுமுறை மற்றும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களை மகிழ்விக்க ஆண்டு தோறும் மே மாதம் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சியின் போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம். இதில், மலர்கள் பூத்துக் குலுங்கும். இந்த மலர் தொட்டிகள் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக வைக்கப்படும். மேலும், பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்டுள்ள பல லட்சம் மலர் செடிகளில் ஏப்ரல் மாதம் முதலே மலர்கள் மலர துவங்கிவிடும். அனைத்து மலர் செடிகளிலும் அவைகளின் வகைக்கேற்ப தனி மலர்களாகவும் கொத்து கொத்தாகவும் பூத்து குலுங்கும். உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பூக்கும் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அவைகள் அனைத்திலும் பூக்கள் பூத்து குலுங்கும் வண்ண மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.