லிப்ட் ஏறிச் சென்று அட்டூழியம் இன்ஜினியரை கத்தியால் குத்தி டூவீலரை திருடிய ‘குசும்பு’ பாலா ஒயின்ஷாப் அருகே சிக்கினார்

மானாமதுரை, ஜன.8: மானாமதுரையில் என்ஜினியரை கத்தியால் குத்தி டூவீலரை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மானாமதுரை குலாலர்தெருவை சேர்ந்த கோபால் மகன் ஆண்டவர்(41) இவர் மானாமதுரையில் கட்டிட பொறியாளராக உள்ளார். நேற்று மதியம் தாயமங்கலம் ரோட்டில் உள்ள பங்கில் டூவீலரில் பெட்ரோல் போட சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். ஆண்டவரும் லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்றார். தாயமங்கலம் ரோட்டில் சென்ற போது பின்னால் அமர்ந்திருந்த மர்மநபர் அருகில் உள்ள இடத்திற்கு கொண்டுபோய் விடுமாறு கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த பொறியாளர் ஆண்டவரை மர்மநபர் கத்தியால் தலை, கை, கால்களில் குத்திவிட்டு டூவீலரை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றார்.

படுகாயமடைந்த ஆண்டவர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.டூவீலரை திருடிய மர்மநபரை போலீசார் தேடினர். நவத்தாவு கிராமத்தின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறம் டூவீலருடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம், எஸ்ஐக்கள் தவமுனி, முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் திருடனை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் டூவீலரை பறித்து சென்றவர் மேலப்பிடாவூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ‘குசும்பு’ பாலா என்ற பாலகிருஷ்ணன்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: