கும்பகோணம், டிச.28: டிராபிக் ராமசாமியின் போராட்டத்தால் கும்பகோணத்தில் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதிக்கு மக்கள் பாதுகாப்பு கழக நிறுவன தலைவரான டிராபிக் ராமசாமி நேற்று சென்றார். அப்போது கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் மதகடி தெருவில் அதிமுக சார்பில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டார்.பின்னர் காரில் இருந்து இறங்கி அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை அகற்றகோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த தகவல் கிடைத்ததும் கும்பகோணம் எஸ்ஐ விஜயா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை அகற்ற உத்தரவிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அதிமுகவினர் வைத்திருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது.