பழநி, டிச. 28: பழநி மலைக்கோயில் ஆனந்த விநாயகருக்கு பாதயாத்திரை பக்தர்கள் நலன்வேண்டி நேற்று சிறப்பு ஹோமம் நடந்தது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20 லட்சத்திற்கும் அதிமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். இவ்விழா வரும் ஜனவரி 15ம் தேதி துவங்க உள்ளது. எனினும், அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக தற்போதே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு வரும் பக்தர்களின் நலனிற்காக பழநி கோயிலில் உள்ள 4 காவல் தெய்வங்களுக்கும் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.