முசிறி அருகே நகை பாலீஷ் போடுவதாக சுற்றித்திரிந்த வாலிபரை மக்கள் போலீசில் ஒப்படைப்பு

தா.பேட்டை, டிச.19: முசிறி அருகே நகை பாலீஷ் போடுவதாக கிராமப் பகுதியில் சுற்றி திரிந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.முசிறி  அடுத்துள்ள டி.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். கடந்த 2  மாதங்களுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சுரேஷ்  மனைவியிடம் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலிக்கு பாலீஷ் போட்டு தருவதாக  கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று டி.அய்யம்பாளையத்தில்  நகை பாலீஷ் போடுவதாக கூறிக்கொண்டு வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர்  சுற்றித் திரிந்துள்ளார். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து  விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் போலீசார்  விசாரணை நடத்தியதில்  பீகார் மாநிலத்தை சேர்ந்த உத்தம்ராஜ் (28) என்பது தெரியவந்தது.  பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: