ராமநாதபுரம், டிச.18: ராமநாதபுரம் பாரதி நகரில் அமைந்துள்ள அம்மா பூங்கா பராமரிப்பின்றி சேதமடைந்து வருவதால், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பயன்படுத்த முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து மராமத்து பணிகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் பாரதி நகரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் வசதிக்காக அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு குழந்தைகளுக்கான சறுக்குகள், ஊஞ்சல்கள், பிளாஸ்டிக் பந்துகள், ஸ்பிரிங் வாத்துகள், சீ ஷாக்கள் உட்பட விளையாட்டு அம்சங்கள் மற்றும் கேன்டீன் வசதிகள் உள்ளன. நகரின் மைய பகுதியில் இருந்ததால் மாலை நேரங்களிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் குழந்தைகளும், பெற்றோர்களும் குவிந்தனர். பூங்காவில் இருந்த விளையாட்டு கருவிகள் சேதமடைந்ததால் சிறுவர், சிறுமிகள் கூட்டம் குறைய தொடங்கியது. பெரும்பாலான விளையாட்டு கருவிகள் உடைந்த நிலையில் உள்ளதால் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்த முடியாமல் உள்ளனர். புல் மற்றும் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. இரவு நேரங்களில் அனைத்து பகுதிகளிலும் மின் விளக்குகளும் எரிவதில்லை. அதனால் குழந்தைகளும், பெற்றோரும் இருட்டில் அவதிப்படுகின்றனர்.