கும்பகோணம்,டிச.12: கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் 25 ஆண்டுகளாக வாய்க்காலை தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். மேலும் வாய்க்கலை விரைந்து தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் அடுத்த வளையப்பேட்டை ஊராட்சி மாங்குடி பகுதியில் உள்ள அரசலாற்றில் இருந்து பிரிந்து தாராசுரம் வழியாக தேப்பெருமாநல்லூர் பகுதிக்கு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் 1000 ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இருப்பினும் கடந்த 25 ஆண்டுகளாக வாய்க்காலை தூர்வாரவில்லை. மேலும் அருகில் குடியிருப்பவர்கள் வீடுகளில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவைகள் கொட்டுவதால் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதுடன் தூர்ந்து வருகிறது. அதேபோல் குடியிருப்புகளில் உள்ள கழிவுநீரை வாய்க்காலில் விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாவதால் அப்பகுதியில் வசிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.