சென்னை,டிச.12: அரசுக்கு எதிராக வாக்களித்ததில் ஓபிஎஸ் உட்பட 11பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு விவகாரத்தில் சபாநாயகரின் நடவடிக்கையால் அரசியல் சாசனம் என்பது காணாமல் போய்விட்டது என நேற்று நடந்த விசாரனையின் போது உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏகே.சிக்ரி, அசோக்பூஷன், அப்துநசீர் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான கபில் சிபில் வாதத்தில்,”தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசியல் சூழலில் மேற்கண்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும் இந்த விவகாரத்தில் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாக தெரிந்தும் சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரது கடமையை செய்ய தவறிவிட்டார். இந்த வழக்கை பொறுத்தமட்டில் சபாநாயகர் முடிவில் யாரும் தலையிட முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் முதல்வரின் நேரடி தொடர்பு உள்ளது. மேலும் இதுகுறித்து கவர்னரிடம் திமுக சார்பில் முதலாவதாக மனு கொடுக்கப்பட்டது. ஆனால் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சபாநாயகரின் இதுபோன்ற நடவடிக்கையால் அரசியல் சாசனம் என்பது காணாமல் போய்விட்டதாக தான் கருத முடியும். மேலும் இந்த விவகாரத்தில் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. அதனால் ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக்கூறி அவரது வாதத்தை நேற்றோடு முடித்துக்கொண்டார்.