வேடசந்தூர், டிச. 11: வேடசந்தூர் ஆத்துமேட்டில் ஆவணங்களை அழித்து அரசு இடம் அபகரிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. வேடசந்தூர் ஆத்துமேட்டில் சங்கு ஊதும் இடம் செயல்பட்டு வந்தது. பேரூராட்சி நிர்வாகம் இந்த இடத்திற்கு வரி வசூல் செய்து வந்ததுடன், இங்கு வேலை பார்த்தவர்களுக்கு சம்பளமும் வழங்கி வந்துள்ளனர். 1900ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த சங்கு ஊதும் இடம் பல ஆண்டுகள் காலி இடமாகவே இருந்தது. இந்நிலையில் அதிகாரிகள் இந்த இடத்திற்கான ஆவணங்களை அழித்து, உள்ளூர் அதிமுக பிரமுகரின் உறவினர் பெயருக்கு பட்டா வழங்கியுள்ளதாக தெரிகிறது. தற்போது இங்கு கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளும் அரசு அதிகாரிகள் இல்லாத விடுமுறை நாட்களில் மேற்கொள்ள வேண்டுமென வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சனி, ஞாயிறு மட்டும் கட்டுமான பணியை மேற்கொண்டு அலுவலகங்கள் செயல்படும் நாட்களில் எந்த பணியும் செய்வதில்லையாம். மேலும் இந்த கட்டுமான பணிக்கு பேரூராட்சியில் பிளான் அப்ரூவல் அனுமதி இதுவரை இல்லை. ஆனால் இதற்கும் அந்த அதிமுக பிரமுகர் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.