அரியலூர், டிச. 7: கீழப்பழூரில் மாடித் தோட்டம் மற்றும் கால்நடைகளுக்கு இயற்கை மருத்துவம் பற்றிய கருத்தரங்கம் நடந்தது.சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம், மற்றும் கீழப்பழூர் பாரத மாநில வங்கி, ஊரக சுயவேலைவாயப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து தொழில்நுட்ப வாரத்தை முன்னிட்டு ஊரக சுயவேலைவாயப்பு பயிற்சி நிறுவனத்தில் மாடித் தோட்டம் மற்றும் கால்நடைகளுக்கு இயற்கை மருத்துவம் பற்றிய கருத்தரங்கம் நடத்தினர். மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையம் வரவேற்று பேசினார். மையத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் அழகுகண்ணன் கருத்தரங்கின் நோக்கம், ரசாயனம் பயன்படுத்தி காய்கறி சாகுபடி செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் மாடித்தோட்ட முறையில் காய்கறி சாகுபடி பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். பாரத மாநில வங்கி, ஊரக சுயவேலைவாயப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் வெங்கிடாசலம் தலைமை வகித்து பேசுகையில் பயிற்சி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் பயன்கள் பற்றியும் மேலும் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளித்து வருவதாகவும் அனைவரும் அதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் கேட்டு கொண்டார். அரியலூர் வட்டார கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் சிறப்புரையாற்றுகையில் கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள திட்டங்கள் பற்றியும், நாட்டு வைத்திய முறையில் கால்நடைகளுக்கு வரும் நோய்களை எவ்வாறு குணப்பபடுத்த முடியும் என்பதனை விரிவாக எடுத்துரைத்தார்.