திருவாடானை, டிச. 6: திருவாடானை அருகே உள்ள கீழ அரும்பூர் கிராமத்தில் மயானம் ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். திருவாடானை அருகே கீழ அரும்பூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் சுமார் 60 குடும்பங்களுக்கு சாலை வசதியுடன் மயானம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மயானத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்து வந்த நிலையில், தற்போது இந்த மயானத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சமீபத்தில் இறந்த ஒரு பெண்ணை அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கிராம பொதுமக்கள் மயான ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தாரிடம் மனு அளித்துள்ளனர்.