பெரம்பலூர், டிச. 4: ராபி 2018-19 பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிகளவில் விவசாயிகள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொ) கலைவாணி தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2018-19ம் ஆண்டுக்கு ராபி பயிர்களான நெல்- 3 நவரை, மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, கரும்பு பயிர்களுக்கும், தோட்டக்கலை பயிர்களான மிளகாய், மரவள்ளி மற்றும் வெங்காய பயிர்களுக்கும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிர் காப்பீட்டு பிரிமிய தொகையை வங்கி மூலமாகவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும் செலுத்தலாம். பயிர்க்கடன் மற்றும் விவசாய நகைக்கடன் பெறும் விவசாயிகள் பிரிமியத்தொகையை கட்டாயமாகவும், கடன்பெறாத விவசாயிகள் விருப்பத்தின்பேரிலும் பிரிமியத்தொகை செலுத்தலாம். விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர குடும்ப அட்டை, ஆதார் கார்டு நகல், கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், கணக்கு வைத்துள்ள வங்கி பாஸ் புத்தக முதல்பக்க ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் செல்போன் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். கடன்பெறும் விவசாயிகள் அந்தந்த வணிக வங்கிகளிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடன்பெறாத விவசாயிகள் வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம்.