ஆவடி, நவ. 30: தம்பதியினரை கொலை செய்து கொள்ளையடித்த நபர் மீது 21 கொள்ளை வழக்குகள் இருப்பதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஆவடி சேக்காடு, ஐயப்பன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகதீசன் (67). இவரது 2வது மனைவி விலாசினி (58). இருவரும் சென்னை தங்கசாலையில் உள்ள அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். தம்பதிக்கு குழந்தை கிடையாது. ஜெகதீசன் வீட்டில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (35) என்பவர் தனது மனைவி லட்சுமியுடன் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். வீட்டின் ஷெட்டில் இவர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், 27ம் தேதி காலை ஜெகதீசன் அவரது மனைவி விலாசினி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். அப்போது, வீட்டில் தங்கியிருந்த ஆந்திர தம்பதினர் மாயமாகினர். கொலையான விலாசினி அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன. மேலும், அவர்களது வீட்டில் உள்ள இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 50 சவரன் நகைகள், ரொக்கம் ஆகியவையும் கொள்ளைபோனது. புகாரின் பேரில், ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 5 தனிப்படை அமைத்து, மாயமான ஆந்திர தம்பதியை தேடி வருகின்றனர். ஆந்திர வாலிபர் சுரேஷ்குமாரின் செல்போன் கடந்த 24ம் தேதி முதல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரது செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்ததில், அடிக்கடி விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள உறவினர்களிடம் பேசியது தெரியவந்துள்ளது.