சேதுபாவாசத்திரம், நவ.29: தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் ஆடிய கோர தாண்டவத்தால் மனித வாழ்க்கை 50 ஆண்டு காலம் பின்னோக்கி சென்றது. ஆட்டுக்கல், அம்மியை தேடும் நிலைக்கு பெண்கள் உள்ளாயினர்.
தஞ்சை டெல்டா மாவட்டத்தின் கடைகோடி பகுதியான பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் கடந்த 4 வருடங்களாக வழக்கமாக நடைபெறும் சம்பா சாகுபடி கைவிட்டு போனது. தென்னை ஒன்றை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருந்தனர். பெற்ற பிள்ளையை விட தென்னம்பிள்ளையைதான் கண்ணும் கருத்துமாக வளர்த்தனர். ஆனால் இது போன்ற இழப்பு ஏற்படும் என யாரும் எண்ணிப்பார்க்காதபடி கஜா புயல் கோர தாண்டவம் ஆடிவிட்டு சென்றுவிட்டது. பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த தென்னை சாகுபடியில் 2.50 லட்சம் தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது. மீதம் நிற்கும் தென்னை மரங்களும் தேறுமா என்பது சிறிது காலம் கழித்துத்தான் தெரியவரும்.