செங்கல்பட்டு, நவ. 28: செங்கல்பட்டில் தீபாவளி பண்ட் நடத்தி 500 பேரிடம் ரூ. 80 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி, மகன் கைது செய்யப்பட்டனர். பணத்தை கேட்டதால் கடத்தி சித்ரவதை செய்யப்பட்ட வாலிபர் மீட்கப்பட்டார். செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பழத்தோட்டத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவரது மனைவி சத்யா (42). இவர்களது மகன் பரணிதரன் (22), செங்கல்பட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சாமிநாதனும், சத்யாவும் தீபாவளி பண்ட் சீட்டுகள் நடத்தி வருகின்றனர். இவர்களிடம் 500க்கும் மேற்பட்டோர், பண்ட் கட்டினர். அந்த வகையில் மொத்தம் 80 லட்சம் வரை சாமிநாதனும், சத்யாவும் பண்ட் பணம் வசூலித்துள்ளனர். இந்நிலையில், தீபாவளி நெருங்கிய நேரத்தில் பணம் கட்டியவர்கள், தீபாவளி பண்ட் கேட்டனர். ஆனால் சாமிநாதன் பொருட்களை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். கடந்த 11ம் தேதி திம்மாவரத்தில் குமார் (35) என்பவர் மூலம் பண்ட் பணம் கட்டியவர்கள், குமாரிடம் பொருட்களை கேட்டனர். இதையடுத்து ஒருநாள், ‘பட்டாசு வாங்கி வர சிவகாசிக்கு செல்ல வேண்டியுள்ளது, நீயும் வா’’ என்று குமாரை தம்பதியர் அழைத்துள்ளனர். குமாரும் சம்மதித்துள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் லாரியில் ஏற்றினர். இதனால், சந்தேகமடைந்து குமார் கேள்வி எழுப்பியபோது, அதற்கு தம்பதியர், ‘’தீபாவளி பண்ட் பற்றி வாய் திறந்தால் அவ்வளவுதான், கொலை செய்து விடுவோம்’’ என்று மிரட்டியுள்ளனர்.