ராமநாதபுரம், நவ.23: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட விவேகானந்தர் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவேகானந்தர் நகர் செல்லும் சாலையில் ரயில்வே சுரங்கப் பாதை புதிதாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போடப்பட்டுள்ள சுரங்கப் பாதைக்குள் தண்டவாளம் வரை மழைநீர் தேங்கியதால் சுரங்க பாதைக்குள் செல்ல முடியவில்லை. மாற்று பாதை இல்லாததால் மாணவர்கள், பொதுமக்கள், நோயாளிகள், முதியவர்கள் அவதியடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த பகுதியில் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் இந்த சாலையில் அவசர காலத்திற்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர். கர்ப்பிணிகளை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வர மறுக்கின்றன.