திருச்சி, நவ.21: முதலீட்டார்கள் சந்திப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வரையறுக்கப்பட்ட முதலீட்டு அளவு ரூ.10 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்தார். சென்னையில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி திருச்சியில் தொழில்கருத்தரங்கம் நடந்தது. திருச்சிமண்டல சிஐஐ தலைவர் ஆனந்தகிருஷ்ணன் வரவேற்றார். இதில் கலந்து கொண்ட தொழில்துறை அமைச்சர் சம்பத் பேசியதாவது:
தமிழகத்தில் 3000க்கும் மேற்பட்ட அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், உலக அளவில் மிகச்சிறந்த 500பெரிய நிறுவனங்கள், 61நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் முயற்சியால் ராணுவ தளவாடங்களை தயாரித்து வளங்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து டிபென்ஸ் காரிடர் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ தளவாளடங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் பயன்பெறும். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சிப்காட் தொழிற்பூங்கா வளாகம் ஒன்றினை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுற்று உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் தேவைளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.