ெபரம்பலூர்,நவ.21: கஜா புயல் நிவாரண பொருட்களை பெற தனி நபருக்கோ, நிறுவனத்திற்கோ அனுமதி வழங்கப்படவில்லை என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட பெரம்பலூர் மாவட்ட மக்கள் பெரும் பங்காற்றிட வேண்டுகிறேன். அவர்களுக்கு உதவிட தாங்கள் தங்களால் இயன்றவரை பொருட்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலக தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நமது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு, கடந்த 19ம்தேதியன்று முதற்கட்டமாக ரூ2.45லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை தஞ்சை மாவட்டத்திற்கும், நேற்று 2ம்கட்டமாக ரூ1.80லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை திருவாரூர் மாவட்டத்திற்கும், 3ம்கட்டமாக ரூ3.60லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கும் என இதுவரை ரூ7.85லட்சம் மதிப்பில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிவாரண பொருட்களை பெற தனி நபருக்கோ, நிறுவனத்திற்கோ அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை.