தொண்டி, நவ.21: கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, நாகை மாவட்டத்தில் களத்தில் தவ்கித் ஜமாத்தினர் சேவை செய்து வருகின்றனர். ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்களையும் வழங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தை நிலை குலைய செய்த கஜா புயலால் நாகை, வேதாரண்யம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி, அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து தெருவில் நிற்கின்றனர். இப்பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்பட்டு பல நாட்களாக இன்னும் சீர் செய்ய வில்லை. மரங்கள் சாய்ந்து கிடப்பதை அப்புறப்படுத்த வில்லை. இதனால் அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.