போலீஸ் வர தாமதம் சாலையில் 5 மணிநேரம் கிடந்த மின்வாரிய அலுவலர் உடல்

பழநி, நவ. 20: பழநி அருகே பெரியகலையம்புத்தூரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (45). மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.திருமணமாகாதவர். இவரது சகோதரர் நித்தியானந்தம் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு நித்தியானந்தம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சகோதரர் இறந்த துக்கத்தில் முருகானந்தம் அதிகளவில் குடித்து  கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் நெய்க்காரப்பட்டியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றின் முன்பு முருகானந்தம் இறந்து கிடந்தார். தகவலறிந்த வந்த முருகானந்தத்தின் உறவினர்கள் இதுதொடர்பாக பழநி தாலுகா போலீசிற்கு தகவல் கொடுத்தனர். ஆனால், மாலை 4 மணி வரை போலீசார் வரவில்லை. போலீஸ் வராமல் முருகானந்தத்தின் உடலை தொட முடியாது என்பதால் உறவினர்கள் சாலையோரத்தில் நின்றே அவரது உடலை பார்த்து அழுது கொண்டிருந்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு வந்த போலீசார் முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: