திண்டுக்கல், நவ. 20: நேற்று மாலை திண்டுக்கல்லில் அதீத இடிச்சப்தத்துடன் கனமழையும் சேர்ந்து கொண்டது. ஏற்கனவே கஜா புயலில் மிரண்டு போயிருந்த மக்களுக்கு இந்த மாறுபட்ட சூழ்நிலை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. கடந்த 16ம் தேதி கடலோர மாவட்டங்களுக்கு கஜா புயல் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும் திண்டுக்கல் மாவட்டத்திலும் இதன் தாக்கம் இருக்கும். மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. எனவே வழக்கமான புயலுக்கான மழை என்று சாதாரணமாக நினைத்திருந்தனர். ஆனால் கடலில் இருந்து வெளியேறிய கஜா நிலத்தின் வழியே குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தை ஊடுருவத் துவங்கியது. அதனால் சூறைக்காற்றும், கனமழையும் மாவட்டத்தை புரட்டிப் போட்டது. கொடைக்கானல், திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டன. குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.