கோரிக்கை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்

திருச்சி, நவ.15: பிஎஸ்என்எல் அனைத்து சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. ‘மூன்றாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பென்ஷன் பங்களிப்பில் அரசாங்க உத்தரவை அமல்படுத்த வேண்டும். பிஎஸ் என்எல் நிர்வாகம் கேட்டு கொண்டபடி 4ஜி ஸ்பெக்டரம் உடனடியாக ஒதுக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் மாற்றம் செய்ய வேண்டும். நிலுவையிலுள்ள 2வது ஊதிய மாற்றத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும்.  இதையொட்டி கடந்த பிப்ரவரி 24ம் தேதி மத்திய அமைச்சர் கொடுத்த உறுதிமொழியை அமலாக்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை வலியறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. தலைமை தபால் நிலையம் சிக்னல் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் துவங்கி பிஎஸ்என்எல் அலுவலகம் வரை மனித சங்கிலி அமைத்து நின்றனர். என்எப்டிஇ மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். ஏயுஏபி கன்வீனர் அஸ்லம்பாட்ஷா முன்னிலை வகித்தார். எஸ்என்இஏ பாலசுப்பிர மணியன், சசிக்குமார், சுப்பிரமணியன், காமராஜ் உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: