புஞ்சை புளியம்பட்டி அருகே பனியன் வேஸ்ட் குடோனில் தீ

சத்தியமங்கலம், நவ. 15: புஞ்சைபுளியம்பட்டி அருகே பனியன் வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரம் மற்றும் பனியன் துணிகள் எரிந்து நாசமாகின.  புஞ்சைபுளியம்பட்டியை அடுத்த திருப்பூர் சாலையில் உள்ள அம்மன் நகரில் கரிவரதராஜன் என்பவருக்கு சொந்தமான பனியன் வேஸ்ட் குடோன் உள்ளது.  நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த சபாபதி(70) இந்த குடோனை வாடகைக்கு எடுத்துள்ளார். இவர் பனியன் வேஸ்ட் துணிகளை திருப்பூரிலிருந்து வாங்கி வந்து இந்த குடோனில் துணிகளை அரைத்து பஞ்சாக மாற்றும் தொழில் செய்து வருகிறார். இந்நிறுவனத்தில் வழக்கம்போல் 20 பணியாளர் நேற்று மாலை வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, இயந்திரத்தை கூர்மையாக்கும் பணி நடந்தது. அதிலிருந்து பறந்த தீப்பொறி திடீரென பனியன் வேஸ்ட் அடுக்கி வைக்கப்பட்ட பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இதைக்கண்ட தொழிலாளர்கள் குடோனை விட்டு வெளியே ஓடிவந்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், பனியன் துணிகள் எரிந்து சேதமடைந்ததன.  தீ விபத்து காரணமாக குடோனின் பக்கவாட்டு சுவர் வலுவிழந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.  தீ விபத்து காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

Related Stories: